முகப்பு
கோயம்புத்தூர்

4 வயது மகளுக்குப் பாலியல் தொல்லை: தந்தைக்கு ஆயுள் சிறை

கோவையில் நான்கு வயது மகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தந்தைக்கு மகளிர் நீதிமன்றம் வியாழக்கிழமை ஆயுள் தண்டனை வழங்கியது. 

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

கோவையில் நான்கு வயது மகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தந்தைக்கு மகளிர் நீதிமன்றம் வியாழக்கிழமை ஆயுள் தண்டனை வழங்கியது. 
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணுபாஸ்கர்(36). இவர் தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்தார். 
இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் நான்கு வயதில் மகளும் உள்ளனர். இதனிடையே,  குடும்பத் தகராறு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.  எனவே, விஷ்ணுபாஸ்கரின் மனைவி 4 வயது மகளை பெற்றோர் பராமரிப்பில் விட்டு விட்டு பெங்களூருவில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
 இந்நிலையில், 2015-ஆம் ஆண்டு அக்டோபர் 17-ஆம் தேதி மகளுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. அப்போது விஷ்ணுபாஸ்கரின் மனைவி  மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி செல்லிடப்பேசி மூலமாக அவருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதன்படி அங்கு சென்ற விஷ்ணுபாஸ்கர் தனது மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டு  வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு வைத்து தனது மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகத் தெரிகிறது. 
இதன் பின்னர் மகளை மாமனார் வீட்டில் விட்டுவிட்டு வெளியே சொல்லக் கூடாது என்று எச்சரித்தாராம். ஆனால், அங்கிருந்தவர்கள் விசாரித்தபோது பெற்ற தந்தையே மகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து கோவை மாநகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் (மத்தியம்) புகார் அளித்துள்ளனர். 
புகாரின் பேரில் போலீஸார் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் (போஸ்கோ) வழக்குப் பதிவு செய்து விஷ்ணுபாஸ்கரை கைது செய்தனர். 
இந்த வழக்கு கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக் கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி அல்லி வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கினார். 
இதில், விஷ்ணுபாஸ்கருக்கு ஆயுள் தண்டனை மற்றும்  ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →