துடியலூர் அருகே சின்னத் தடாகத்தில் உள்ள சங்கனூர் பள்ளத்தில் புதிதாக உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
கோவை ஆனைக்கட்டி, மாங்கரை, சேம்புகரை உள்பட மலைப் பகுதிகளிலிருந்து வரும் மழை நீர் சங்கனூர் பள்ளம் வழியாக கோவையை அடைகிறது. சின்னத் தடாகம் ஊராட்சிக்குள்பட்ட இந்திரா நகர் அருகில் இந்த பள்ளத்தின் கிளை பள்ளம் செல்கிறது.
தடாகம் சாலையிலிருந்து சின்னத் தடாகம் வழியாக இந்த கிளைப் பள்ளத்தின் குறுக்கே கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலம் கட்டப்பட்டது. இந்த தரைபாலம் வழியாக மழை நீர் வரும்போது, பாலத்தை கடக்க பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
மேலும் இந்த பாலமும் மிகவும் சேதமடைந்ததால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கினர். இதனால் இந்தப் பள்ளத்தை சீரமைக்ககோரி அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை இந்தப் பள்ளத்தை ஆய்வு செய்து உயர் மட்ட மேம்பாலம் கட்ட முடிவு செய்தது.
இதற்காக நபார்டு வங்கி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ரூ. 3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பூமிபூஜைக்கு கவுண்டம்பாளையம் சட்டப் பேரவை உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி தலைமை வகித்து பணிகளைத் தொடக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் பிரசாந்த், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கோபிநாத், கீதா, ஒன்றிய முன்னாள் தலைவர்கள் வீரபாண்டி விஜயன், கோவனூர் துரைசாமி, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் சரவணகுமார், ரவி, தடாகம் ஆனந்தன், கூட்டுறவு வங்கி இயக்குநர்கள் ரமேஷ், மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.