சந்தேகத்தால் தகராறு: கணவர் மீது அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்ற மனைவி!
தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்ற மனைவி கைது செய்யப்பட்டது குறித்து...
சேலம் அம்மாபேட்டை பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக, தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்ற மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் அம்மாபேட்டை வையாபுரி தெருவைச் சேர்ந்தவர் தங்கம் (40). இவரது மனைவி பத்மா (40). காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
தங்கம் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. தனது மனைவி பத்மாவின் நடத்தையில் சந்தேகமடைந்த தங்கம், அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
நேற்று இரவு தங்கம், மதுபோதையில் வீட்டிற்கு வந்து பத்மாவிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பத்மாவை அவர் தாக்கியதாகவும் தெரிகிறது. பின்னர், தங்கம் அங்கேயே உறங்கிவிட்டதாகத் தெரிகிறது.
கணவரின் தொடர் சித்திரவதையாலும், தாக்குதலாலும் ஆத்திரமடைந்த பத்மா, தங்கம் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து அவரது தலையில் போட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தங்கம், சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து தங்கத்தின் சகோதரர் மணி (43) அளித்த புகாரின் பேரில், அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் முருகராஜா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். கொலைக் குற்றத்திற்காக பத்மாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.