மது அருந்த பணம் தர மறுத்த பெண்ணைக் கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், நெறிஞ்சிபாடி பகுதியைச் சேர்ந்தவர் பாக்யராஜ் (28). இவர் திருச்சி சாலையில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். அப்போது, உடன் பணியாற்றிய முருகேஸ்வரி என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
குடிப் பழக்கத்துக்கு அடிமையான பாக்யராஜ் அடிக்கடி பணம் கேட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2013- இல் முருகேஸ்வரியிடம் மதுக் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.
ஆனால், முருகேஸ்வரி பணம் கொடுக்க மறுத்ததால் அவரை பாக்யராஜ் கொலை செய்துள்ளார். பின்னர், அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளார். இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், முருகேஸ்வரி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பாக்யராஜை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில், பாக்யராஜுவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 2,500 அபராதமும் விதித்து நீதிபதி அல்லி (பொறுப்பு) உத்தரவிட்டார்.