வரி மறுசீராய்வு நடவடிக்கை, குடிநீர்க் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றைத் திரும்பப் பெற வலியுறுத்தி மாநகராட்சி பிரதான அலுவலகத்தை அனைத்துக் கட்சியினர் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகராட்சி நிர்வாகம் உயர்த்தியுள்ள வரி, கட்டணங்களைத் திரும்பப் பெறக் கோரி திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், கொமதேக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:
உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் மாநகராட்சி ஆணையர் டாக்டர் விஜயகார்த்திகேயன் தன்னிச்சையாக வரி, கட்டணங்களை உயர்த்தியுள்ளார். மாநகராட்சிப் பகுதிக்கு உள்பட்ட நூறு வார்டுகளில் எவ்வித அடிப்படை வசதியும் மேற்கொள்ளவில்லை. இதனால், பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர் என்றனர்.
போராட்டத்தில் திமுக சட்டப் பேரவை உறுப்பினர் நா.கார்த்திக், வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் மு.முத்துசாமி, காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் மயூரா ஜெயகுமார், மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.எஸ்.சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.