முகப்பு
கோயம்புத்தூர்

பசுமை வழித்தடம் மூலம் அடுத்த ஆண்டுக்குள் 500 மெகாவாட் மின்சாரம் கொண்டு செல்லப்படும்

தமிழகத்தில் மிகையாக இருக்கும் காற்றாலை மின்சாரத்தை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கான பசுமை வழித்தடத்தில்

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

தமிழகத்தில் மிகையாக இருக்கும் காற்றாலை மின்சாரத்தை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கான பசுமை வழித்தடத்தில் அடுத்த ஆண்டுக்குள் 500 மெகா வாட் மின் விநியோகம் நடைபெறும் என்று மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் மேலும் கூறியதாவது:
மின் வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வுப் பேச்சுவார்த்தையில் நாங்கள் திறந்த மனதுடன் இருக்கிறோம். ஊதிய உயர்வுப் பேச்சுவார்த்தை முடிவடையாத நிலையிலேயே போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என இரண்டு தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் அறிவித்துள்ளனர். அவர்களின் போராட்ட அறிவிப்பில் உள்நோக்கம் இருப்பதாகக் கருதுகிறேன்.
நாட்டிலேயே காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் மின் மிகை காலங்களில் மிகையான மின்சாரத்தை வெளிமாநிலங்களுக்கு கொண்டுச் செல்வதற்காகத் தனி வழித் தடம் தேவை என்று மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அதன்படி இந்த ஆண்டு சுமார் 150 மெகா வாட் மின்சாரத்தைக் கொண்டு செல்வதற்கான வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இது அடுத்த ஆண்டுக்குள் 500 மெகா வாட்  அளவுக்கு அதிகரிக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
மத்திய அரசின் உதய் திட்டத்தில் சேர்ந்த பிறகு மின்வாரியத்தின் வருவாய் இழப்பு குறைந்து வருகிறது. அடுத்த நான்கு ஆண்டுகளில் இழப்பு முழுவதும் சரி செய்யப்படும். 
மின்வாரியத்துக்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறவில்லை. அதற்காக எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறோம். தமிழகத்துக்குத் தேவையான நிலக்கரியை கடந்த 2 ஆண்டுகளாக  உள்நாட்டு உற்பத்தியில் இருந்தே மத்திய அரசு வழங்கி வருகிறது. 
வட மாநிலங்களில் அண்மையில் பெய்த மழை காரணமாக சுரங்கங்களில் நீர் தேங்கியிருப்பதால் தாற்காலிகமாக 20 லட்சம் டன் நிலக்கரியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளும்படியும், மீதியை நாங்களே தருகிறோம் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. அதனால், தாற்காலிகமாக நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.