வித்யாலய நிறுவன நாள் விழா: முன்னாள் மாணவர்களுக்கு விருது
பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கல்வி நிறுவனங்களின் நிறுவன நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கல்வி நிறுவனங்களின் நிறுவன நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அனைத்து வித்யாலய முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் ஜி.கே.டி. கலையரங்கத்தில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்புக் கல்வியியல் புல முதன்மையர் என்.முத்தையா வரவேற்றார். வித்யாலய செயலர் சுவாமி கரிஷ்டானந்தர் அறிமுகவுரையாற்றினார்.
உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் பொதுச் செயலாளர் சுவாமி அபிராமானந்தா தலைமை வகித்து வித்யாலய நிறுவனர் தி.சு.அவினாசிலிங்கம் குறித்து நினைவுச் சொற்பொழிவாற்றினார்.
அதையடுத்து, சமுதாயப் பணிகளில் சிறந்து விளங்கும் வித்யாலயத்தின் முன்னாள் மாணவர்களான தைரோ கேர் நிறுவன நிர்வாக இயக்குநர் ஏ.வேலுமணி, நாமக்கல் சிறார் நீதிமன்ற உறுப்பினர் எம்.தில்லை சிவம், தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் இணை இயக்குநர் ஜி.ரவீந்தரநாத் சிங், சீனிவாச அசோசியேட்ஸ் நிறுவனத் தலைவர் ஜி.சீனிவாசன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. விருது பெற்றவர்கள் ஏற்புரை நிகழ்த்தினர். வித்யாலய செய்தி மடலை சுவாமி அபிராமானந்தர் வெளியிட, அதை சுவாமி கரிஷ்டானந்தர், விருதாளர்கள் பெற்றுக்கொண்டனர். மாணவர் சங்கச் செயலர் எஸ்.அழகேசன் நன்றி கூறினார்.
இதனைத் தொடர்ந்து வித்யாலயத்தில் உள்ள 18 கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ மாணவிகளைச் சந்தித்த முன்னாள் மாணவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். தி.அ.தி.கலா நிலையத்தின் செயலர் சுவாமி ஹரிவிரதானந்தரின் நிறைவுப் பாடலுடன் விழா நிறைவுற்றது.