கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கத்தியால் உடலைக் கீறி தற்கொலைக்கு முயன்ற நபரால் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த காளியாபுரம், சோமந்துறை சித்தூரைச் சேர்ந்தவர் ஜீவன் மைக்கேல் ஜோஸப் (50). ஆங்கிலோ இந்தியன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி சித்ரா. இத்தம்பதிக்கு 11, 10 வயதில் இரு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், ஜீவன் மைக்கேல் ஜோஸப் தனது இரு மகள்களையும் அழைத்துக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்துள்ளார். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த ஜோஸப், தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார். மேலும், கத்தியால் உடலைக் கீறிக் கொண்டார். தகவலின்பேரில் அங்கு வந்த ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் காயமடைந்த அவரை மடக்கிப் பிடித்து கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், "ஜீவன் மைக்கேல் ஜோஸப் சற்று மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தனது சொத்துகளை யாரோ அபகரிப்பதாக கூறுகிறார். மனைவி திருப்பூரில் வேலை செய்வதாகவும், தனது அக்கா சென்னையில் இருப்பதாகவும், மாறி மாறி, சம்மந்தம் இல்லாமல் பேசி வருகிறார். இதனாலேயே கத்தியால் உடலில் கீறி தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிகிறது. ஆனால் அவரது இரு மகள்களும் நல்லநிலையில் உள்ளனர். ஆகவே, இருவரையும் டான்போஸ்கோ அன்பு இல்லத்தில் ஒப்படைத்துள்ளோம் என்றனர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.