"இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்தவர் சுவாமி விவேகானந்தர்'
இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்தவர் சுவாமி விவேகானந்தர் என்று மாநகர காவல் ஆணையர் கு.பெரியய்யா பேசினார்.
இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்தவர் சுவாமி விவேகானந்தர் என்று மாநகர காவல் ஆணையர் கு.பெரியய்யா பேசினார்.
கோவை, சரவணம்பட்டியில் உள்ள பி.பி.ஜி.தொழில்நுட்பக் கல்லூரி, வணிகப் பள்ளி ஆண்டுவிழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாநகர காவல் ஆணையர் கு.பெரியய்யா பேசியதாவது:
உலக நாடுகளின் மத்தியில் இந்தியா என்றால் ஏழை நாடு என்ற கருத்து மட்டுமே பரவலாக நிலவி வந்தது. இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் நடைபெற்ற அனைத்து சமய மாநாட்டில் விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவில் இருந்துதான் நமது நாட்டின் வலிமை உலக நாடுகளுக்கு தெரிந்தது. இந்தியாவின் பெருமையை முதன்முதலில் உலகறியச் செய்தவர் சுவாமி விவேகானந்தர். அனைத்து மதத்தினரையும் சகோதரர்களாக நினைக்கும் சிறப்பு கொண்டது நம் நாடு. மற்ற நாடுகளைக் காட்டிலும் நமது நாட்டின் பண்பாடு, கலாசாரம் சிறந்தது.
தாய், தந்தை, ஆசிரியரைப் போற்றுவதே இதற்கு மிகச்சிறந்த உதாரணமாகும். உலக அளவில் சிறந்து விளங்கும் பெரும்பாலான நிறுவனங்களில் தலைமைப் பதவியில் இருப்பவர்கள் இந்தியர்கள்தான்.
வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும் என்று நினைக்கும் மாணவர்கள் அதற்காக முழு ஈடுபாட்டுடன் பாடுபடவேண்டும் என்றார்.
இவ்விழாவில், பி.பி.ஜி.கல்விக் குழுமங்களின் தலைவரும், மருத்துவருமான எல்.பி.தங்கவேலு, தாளாளர் சாந்தி தங்கவேலு, பி.பி.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் ஆர்.பிரகாசம், வணிகப் பள்ளி இயக்குநர் டி.தேவசேனாதிபதி, பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.