கம்பெனிச் செயலர் படிப்பு: டிசம்பர் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 31 கடைசி நாள்
கம்பெனி செயலர் (கம்பெனி செக்ரட்ரீஸ்) ஆரம்ப நிலை படிப்பில் சேர விரும்புபவர்கள், டிசம்பர் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு
கம்பெனி செயலர் (கம்பெனி செக்ரட்ரீஸ்) ஆரம்ப நிலை படிப்பில் சேர விரும்புபவர்கள், டிசம்பர் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு மார்ச் 31-ஆம் தேதி கடைசி நாள் என்று இந்திய கம்பெனி செயலர்கள் நிறுவனம் (ஐ.சி.எஸ்.ஐ.) தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் கம்பெனி விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஐ.சி.எஸ்.ஐ. நிறுவனங்கள் மூலமே சி.ஏ., சி.எஸ்., காஸ்ட் அக்கெளண்டிங் ஆகிய படிப்புகளை படிக்க முடியும். இந்நிலையில், மூன்று ஆண்டு படிப்பான கம்பெனி செயலர்கள் படிப்பில் ஆரம்ப நிலையில் சேருவதற்கு டிசம்பர் மாதம் தேர்வு நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வு எழுத விரும்புபவர்கள் மார்ச் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கோவை கிளை ஐ.சி.எஸ்.ஐ. அறிவித்துள்ளது. இந்தத் தேர்வுக்கு தற்போது பிளஸ் 2 தேர்வு எழுதி வரும் மாணவ-மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். அத்துடன் கல்லூரிகளில் வேறு பாடங்களைப் பயின்று வரும் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளும் இந்த படிப்பில் பகுதி நேரமாக சேர்ந்து படிக்க விண்ணப்பிக்கலாம். டிசம்பர் மாதத்துக்குள் இந்த படிப்பில் சேரும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கும், மிகவும் பின்தங்கிய வகுப்பினர், உடல் ஊனமுற்ற மாணவர்களுக்கும் இலவச கல்வி அளிக்கப்பட உள்ளது. மேலும் கல்வி உதவித் தொகைகளும் வழங்கப்பட உள்ளன.
ஆரம்ப நிலை படிப்புகளில் சேருவதற்காக சிறப்பு சேர்க்கை மையம் கோவை ராம் நகர், சாஸ்திரி சாலையில் உள்ள கோவை கிளை ஐ.சி.எஸ்.ஐ. மையத்தில் மார்ச் 29-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை, மாணவர்கள் பதிவு செய்வதற்கான வசதிகளை வழங்குகிறது.
விருப்பம் உள்ள மாணவர்கள், சான்றொப்பமிட்ட 10, 12-ஆம் வகுப்பு சான்றிதழ்கள், ஆதார் அட்டை, புகைப்படம் போன்றவற்றுடன், பதிவுக் கட்டணம் ரூ.4,500 செலுத்தி மேற்கண்ட முகவரியில்
பதிவு செய்து கொள்ளலாம். இது குறித்த மேலும் விவரங்களுக்கு 0422 - 2237006, 94864 77497 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று கோவை ஐ.சி.எஸ்.ஐ. மையம் அறிவித்துள்ளது.