மேட்டுப்பாளையம் நகரப் பகுதியில் உள்ள சாலைகளில் கூட்டமாக நடமாடி வரும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் நகரப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஆடு, மாடு, எருமை உள்ளிட்ட கால்நடைகள் நடமாடி வருகின்றன. இவை, ஆற்றுபாலம் அருகே உள்ள உருளைக்கிழங்கு, முட்டைக் கோஸ், பூண்டு மொத்த விற்பனை மண்டிகள் மற்றும் காய்கறிக் கழிவுகளைச் சாப்பிட்டு வருகின்றன.
இந்தக் கால்நடைகள் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து அன்னூர், உதகை, கோத்தகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் சாலைகளில் நடுவில் படுத்து வாகனப் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றன.
எனவே, சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நடமாடும் கால்நடைகளைப் பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.