ரூ. 1.66 கோடி மோசடிதலைமறைவாக இருந்த ஈமு கோழிப் பண்ணை உரிமையாளர் கைது
ரூ. 1.66 கோடி மோசடி வழக்கில் கடந்த ஓர் ஆண்டாகத் தலைமறைவாக இருந்த ஈமு கோழிப் பண்ணை உரிமையாளர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
ரூ. 1.66 கோடி மோசடி வழக்கில் கடந்த ஓர் ஆண்டாகத் தலைமறைவாக இருந்த ஈமு கோழிப் பண்ணை உரிமையாளர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
கோவை, பொள்ளாச்சி சாலை, கிணத்துக்கடவு அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார், பத்மநாபன், ராஜேஷ்வரன் ஆகியோர் சேர்ந்து அதே பகுதியில் ஈமு கோழிப் பண்ணை நடத்தி வந்தனர்.
அவர்கள், ஈமு கோழி வளர்ப்பில் அதிக வட்டி தருவதாக கூறியதை நம்பி கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் முதலீடு செய்துள்ளனர். ஆனால், முதலீடு செய்தவர்களுக்கு வட்டி கொடுக்காமல் ரூ. 1.66 கோடி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கோவை பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல் துறையினரிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் புகார் அளித்தனர்.
அதன்பேரில் ஈமு கோழிப் பண்ணை உரிமையாளர்களான ஜெயகுமார், பத்மநாபன், ராஜேஷ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் மூன்று பேரும் ஜாமீனில் வந்துள்ளனர். அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஜெயகுமார் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
இதையடுத்து, அவரைக் கைது செய்ய டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், பொருளாதார குற்றப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், ஓர் ஆண்டாகத் தலைமறைவாக இருந்த ஜெயகுமாரை திங்கள்கிழமை கைது செய்தார்.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.