மேட்டுப்பாளையம் அருகே கோப்பனாரி ஆதிவாசி கிராமத்தில் மலைவாழ் மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவை மாவட்ட காவல் துறை மற்றும் நக்ஸல் தடுப்புப் பிரிவு, ஏ.இ.எஸ் டெக்னாலஜி ராஜஸ்தான் காஸ்மா ஆகியவை சார்பில்
நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தலைமை வகித்து நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:
தற்போது பல்வேறு வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. உடல் நலக்கோளாறு ஏற்பட்டால் காலதாமதம் செய்யாமல் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சென்று சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும். குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும்.
படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கைஎடுக்கப்படும் என்றார்.
நக்ஸல் தடுப்பு பிரிவு மேற்கு மண்டல கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன் நிவாஸ், ஏ.இ.எஸ் டெக்னாலஜி ராஜஸ்தான் காஸ்மா இயக்குநர் பாலாஜிஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு தனிப் பிரிவு தலைமை காவலர் சுரேஷ்குமார்வரவேற்றார். காரமடை காவல் ஆய்வாளர் சக்திவேல், நக்ஸல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் சுந்தரராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
விழாவில் அரக்கடவு, மூனுக்குட்டை, குளியூர், கோப்பனாரி உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட ஆதிவாசி கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோருக்கு வேட்டி, சேலை, மதிய உணவு வழங்கப்பட்டன.
விழாவில், காரமடை உதவி காவல் ஆய்வாளர்கள் நெல்சன், சுரேந்திரன், நக்ஸல் தடுப்பு பிரிவு போலீஸார் என பலர் கலந்துகொண்டனர். நக்ஸல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் மாடசாமி நன்றி கூறினார்.