உணவகத்தில் இருந்து ராணுவத்தினருக்கான 195 மதுபாட்டில்கள் பறிமுதல்
ராணுவத்தினருக்கு வழங்கப்படும் மதுவகைகள், புதுச்சேரி மாநில மதுவகைகள் உள்ளிட்டவை சூலூர் அருகே
ராணுவத்தினருக்கு வழங்கப்படும் மதுவகைகள், புதுச்சேரி மாநில மதுவகைகள் உள்ளிட்டவை சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் உள்ள ஓர் உணவகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
சூலூரை அடுத்துள்ள பாப்பம்பட்டி பிரிவில் உள்ள தனியார் உணவகத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து இருப்பதாக கோவை மது விலக்குப் பிரிவு காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில், பொள்ளாச்சி மது விலக்குக் காவல் பிரிவு ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான காவல் துறையினர் அந்தத் தனியார் உணவகத்தில் சனிக்கிழமை ஆய்வு செய்தனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்ட 30 மதுபாட்டில்கள், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 35 மதுபாட்டில்கள் மற்றும் ராணுவத்தினருக்கு மட்டும் வழங்கப்படும் 130 பாட்டில்கள் என 195 மதுபாட்டில்களை காவல் துறையினர் கைப்பற்றினர்.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தனியார் உணவகத்தின் விற்பனைப் பிரிவில் பணி புரிந்த சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ்.காலனியைச் சேர்ந்த வீரபத்திரன் மகன் சாய் பிரகாஷ் (45), ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் சரவணன் (42) ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவான சூலூரைச் சேர்ந்த குட்டி என்பவரைத் தேடி வருகின்றனர்.