பச்சினாம்பதி மலைவாழ் மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும்
கோவை பச்சினாம்பதி மலைவாழ் மக்களுக்கு குடியிருப்புகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என
கோவை பச்சினாம்பதி மலைவாழ் மக்களுக்கு குடியிருப்புகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையின் காரணமாக பேரூர் அருகே பச்சினாம்பதி கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து உணவு மற்றும் நிவாரணப் பொருள்களை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:
மலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பச்சினாம்பதி கிராமத்தைச் சேர்ந்த 54 ஆண்கள், 19 பெண்கள், 8 குழந்தைகள் என 25 குடும்பங்களைச் சேர்ந்த 81 மலைவாழ் மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழையால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை அனைத்துத் துறை அலுவலர்களுடன் பார்வையிட்டு பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்கவும், குடிநீர் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், நீர் வழித்தடங்களில் பொதுப்பணித் துறையின் மூலமாகக் குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் புகாமல் தடுக்க தடுப்பணை கட்டவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தரமாக குடியிருப்பதற்கு ஏற்ற வகையில் பச்சினாம்பதி கிராமத்தில் குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக 80 குடியிருப்புகளைக் கட்டித்தரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், கோட்டாட்சியர் தனலிங்கம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பத்மாவதி, பொதுப்பணித் துறை (நீர்வள ஆதாரம்) ஜெயபிரகாஷ், பேரூர் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.