தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தமிழக - கேரள எல்லையான வாளையாறு சோதனைச் சாவடியில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுக்கரை ஆய்வாளர் தூயமணி வெள்ளைசாமி தலைமையில் உதவி ஆய்வாளர் ஜான் உள்ளிட்ட போலீஸார் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் வாளையாறு சோதனைச் சாவடி நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கேரளம் செல்லும் வாகனங்கள் கண்காணிப்பட்டு வருகின்றன. மேலும், சந்தேகம் ஏற்படும் வகையில் உள்ள வாகனங்களின் பதிவு எண்களை பதிவு செய்தும் வருகின்றனர். வேலந்தாவளம் சோதனைச் சாவடியிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுக்கரை குவாரி ஆபிஸ் பகுதியிலும் உதவி ஆய்வாளர் தலைமையில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது. கேரளம் செல்லும் வாகனங்கள் மட்டுமின்றி உள்ளூர் வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. மதுக்கரையில் உள்ள முக்கிய வீதிகளிலும் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.