கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மயானங்களில் சடலங்களை அடக்கம் செய்ய போதிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என நா.கார்த்திக் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதியை வெள்ளிக்கிழமை சந்தித்து அவர் மனு அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 100 வார்டுகளிலும் மயானங்கள் அமைந்துள்ளன. அந்த மயானங்களில் போதிய வசதிகள் இல்லாததால் இறந்தவர்கள் உடலை நல்லடக்கம் செய்ய முடியாமல் பொதுமக்கள் பல்வேறு சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். அனைத்து மயானங்களும் முட்புதர்களும், குப்பைகளும் நிறைந்து காட்சி அளிக்கின்றன. குறிப்பாக பீளமேடு 38, 39 ஆகிய வார்டுகளில் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல தெருவிளக்குகள் இல்லாமல் கோவை மாநகரம் இருளில் மூழ்கியுள்ளது. ஸ்ரீபதி நகர் பகுதியில் ரூ.38 லட்சம் செலவில் மழைநீர் வடிகால் கட்டப்பட்டுள்ளது.
இது எவ்வித பயன்பாடும் இல்லாமல் உள்ளது. முறைகேடு செய்வதற்காகவே இந்த மழைநீர் வடிகாலை கட்டியுள்ளனர். கோவை மாநகராட்சிப் பகுதி மக்களின் பிரச்னைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் தீர்வு காண்பது இல்லை. மக்களின் பிரச்னைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்.