கோவை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.
கோவை, வேடப்பட்டியைச் சேர்ந்தவர் மனோ. இவரது மகன் டேனியல் (15). இவர் அருகில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில், டேனியல் அவரது நண்பர் தரணீஸ்வரனுடன் (14) இருசக்கர வாகனத்தில் வீரகேரளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தார். வேடப்பட்டி-வீரகேரளம் சாலையில் பால் பண்ணை அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே டேனியல் உயிரிழந்தார். படுகாயமடைந்த தரணீஸ்வரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே தரணீஸ்வரனும் உயிரிழந்தார். இதில் விபத்து நடந்தவுடன் கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காரை அடித்து நொறுக்கினர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வடவள்ளி போலீஸார், டேனியலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய வாடகை கார் ஓட்டுநர் பிரகாஷை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.