கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடப்பு ஆண்டில் மேற்கொண்ட ஆய்வில் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள 15.19 மெட்ரிக் டன் தரமற்ற விதைகள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவை மண்டல விதை ஆய்வு துணை இயக்குநர் மோகனசுந்தரம் தெரிவித்துள்ளார்.
கோவை மண்டல துணை இயக்குநர் அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் அரசு, அரசு சார்பு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதைச் சட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ள படி விற்பனை மேற்கொள்ள வேண்டும்.
கொள்முதல் செய்யப்படும் விதைகளில் அவற்றின் ரகம், குவியல் எண், காலாவதி எண் உள்ளிட்டவைகள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அதுபோல் சில்லறை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் விதைகளில் அவற்றின் ரகங்கள், முளைப்புத் திறன், ஈரப்பதம், காலாவதி எண், சரியான விலை உள்ளிட்டவை அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.
மேலும் கடைகளில் கொள்முதல் விவரம், விற்பனை பதிவேடுகள், விதைகள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட விவரங்கள் இடம்பெற்று இருக்க வேண்டும். ஒவ்வொரு வட்டாரத்தில் உள்ள சில்லறை விற்பனை நிலையங்களை விதை ஆய்வாளர்கள், விதை ஆய்வு துணை இயக்குநர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
அரசு அறிவித்துள்ள விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள விதைகள் பறிமுதல் செய்யப்பட்டு விற்பனைக்குத் தடை விதிக்கப்படுகிறது.
இது தொடர்பாக விதை ஆய்வு துணை இயக்குநர் மோகனசுந்தரம் கூறியதாவது:
2018 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையில் கோவை மண்டல துணை இயக்குநர் கட்டுப்பட்டில் உள்ள கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள கடைகளில் மேற்கொண்ட ஆய்வில் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள 15.19 மெட்ரிக் டன் தரமற்ற விதைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விற்பனை நிலையங்களில் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். விதைச்சான்றுத் துறை சார்பில் வழங்கப்படும் பதிவு எண்கள் இல்லாத விதைகள் விற்பனைக்குத் தடை விதிக்கப்படும் என்றார்.