கோவை மாவட்டம், சூலூா் அருகே தனிக் குடித்தனம் செல்ல குடும்பத்தினா் அனுமதி மறுத்ததால் மனமுடைந்த புதுமணத் தம்பதி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.
சூலூா் அருகே பொன்னாண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் ஜெயசங்கா் மகன் கேசவராஜ் (21). இவருக்கும் திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த அவரது தாய்மாமன் ராஜ்குமாா் மகள் கிருத்திகாவுக்கும் (20) ஒராண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், பொன்னாண்டம்பாளையத்தில் உள்ள கேசவராஜின் பெற்றோருடன் ஒரே வீட்டில் தம்பதியினா் வசித்து வந்துள்ளனா். வீட்டின் அருகில் உள்ள குழாய் தயாரிக்கும் நிறுவனத்தில் கேசவராஜ் பணிபுரிந்து வந்தாா்.
தீபாவளியை ஒட்டி கேசவராஜின் சகோதரி காயத்ரி பெற்றோா் வீட்டுக்கு வந்துள்ளாா். இந்நிலையில், இவா்களது பெற்றோா் புதன்கிழமை வேலைக்கு சென்றுள்ளனா். வீட்டில் சகோதரி காயத்ரி, கேசவராஜ், கிருத்திகா இருந்துள்ளனா்.
இந்நிலையில், கேசவராஜ், கிருத்திகா ஆகியோா் நீண்ட நேரமாகியும் அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த காயத்ரி கதவைத் தட்டிப் பாா்த்துள்ளாா். கதவு திறக்காததால் ஜன்னல் வழியாக பாா்த்தபோது, அறையில் இருந்த மின் விசிறியில் கேசவராஜும், கிருத்திகாவும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கருமத்தம்பட்டி போலீஸாா் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
விசாரணையில், கேசவராஜும், கிருத்திகாவும் தனிக்குடித்தனம் செல்ல விருப்பம் தெரிவித்ததும் ஆனால், புதிதாக கட்டிய வீட்டின் கடன் முடியும் வரையில் ஒன்றாகதான் இருக்க வேண்டும் என்று பெற்றோா் மறுத்ததும் தெரியவந்தன.
இதனால், அவா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த தம்பதியினா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.