கோவையில் சாய் சேவா பரிவார் அமைப்பின் துவக்க விழா மற்றும் அமைப்பின் கொடி அறிமுக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவை, வடவள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு சிறப்பு விருந்தினராக மேகாலய மாநில முன்னாள் ஆளுநர் வி.சண்முகநாதன் கலந்து கொண்டு அமைப்பை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார். கெளரவ விருந்தினராக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
சென்னை சாயி பாத மெய்யடிமை விபூதி சித்தர் ஆசியுரை வழங்கினார். விழாவிற்கு சாய் சேவா பரிவார் அமைப்பின் நிறுவனத் தலைவர் எம். சாய் செந்தில்குமார் தலைமை வகித்து பேசுகையில், இந்த சாய் சேவா பரிவார் அமைப்பானது தமிழகம் முழுவதும் இருக்கின்ற ஸ்ரீ ஷீரடி சாய் பாபா பக்தர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் புதியதாக கட்டப்படவுள்ள பாபா கோயில் கட்டுமானப் பணிகளுக்கு உதவுதல், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு பல நலத் திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன.
இதற்காக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அலுவலகம் துவக்கியுள்ளோம். மேலும், ஷீரடியில் ஒரு அலுவலகமும் அமைத்துள்ளோம். வயதான மற்றும் பொருளதார வசதி இல்லாதவர்கள் ஷீரடி செல்ல விரும்பினால் எங்கள் அமைப்பு மூலம் இலவசமாக சென்று வர ஏற்பாடு செய்து தருகிறோம்.
மேலும், சாய் சேவா பரிவார் அமைப்பு மற்றும் கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் ஆஃப் ஆக்ருதியுடன் இணைந்து நலத் திட்டப் பணிகளில் ஈடுபட உள்ளோம் என்றார்.
மாநிலத் தலைவர் சி.என். பரமசிவம், மாநில மகளிர் அணியின் சாய் கவிதா, பொருளாளர் சம்பத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாநில பொதுச் செயலாளர் ஜி. தர்மேந்திரா வரவேற்றார். சாய் சேவா பரிவார் அமைப்பின் பெண்கள் பிரிவின், மாநில பொது செயலாளர் பிரீத்தி லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.