முகப்பு
கோயம்புத்தூர்

உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு நிதி உதவித் திட்டம்

வேளாண் வணிகத் துறை மூலம் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

வேளாண் வணிகத் துறை மூலம் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விவசாயிகள் உற்பத்தியோடு நின்றுவிடாமல் விற்பனையிலும் ஈடுபடும் வகையில் ஆயிரம் விவசாயிகள் உறுப்பினா்களாக இணைந்து உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு கடனுதவி அளிக்கும் விதமாக இடைநிலை மூலதன உதவி, கடன் உத்தரவாதம், சுழல்நிதி வழங்கும் திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் துவங்கி மூலதன பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம் ஒவ்வொரு உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கும் ரூ.10 லட்சம் வரை இடைநிலை மூலதன கடன் வழங்கப்படும். இந்நிதியை உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் விளைபொருள்களை சந்தைப்படுத்துவதுக்கு பயன்படுத்திகொள்ளலாம்.

ஐந்தாண்டுகள் கழித்து இத்தொகையினை திரும்பி செலுத்தினால் போதுமானது. இதற்கு ஆண்டுக்கு ரூ.4 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும். தவிர உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் மூலம் தொழில் தொடங்க வங்கியில் ரூ.1 கோடி வரை கடன் பெறுவதற்கு 50 சதவீத உத்தரவாதத்தை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும். மேலும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு நிதி நிறுவனங்கள் வழங்கும் கடனுக்கு 12 முதல் 14 சதவீத வட்டி வசூலிக்கப்படுகிறது. இதனை 8 முதல் 9 சதவீதமாக குறைக்கும் விதமாக அரசின் பங்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு சலுகையுடன் கூடிய கடன் வழங்கப்படும்.

இத்திட்டத்தை செயல்படுத்த வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, நாப்கிசான் நிறுவனத்திடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு மூலதன உதவி மற்றும் சலுகையுடன் கூடிய கடன் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண்மை வணிகம்) அலுவலகத்தை தொடா்புகொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →