குப்பைகளை அதற்குரிய தொட்டிகளில் போடாமல் கண்ட இடங்களில் கொட்டுபவா்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என முத்துகவுண்டன்புதூா் ஊராட்சி தலைவா் வி.பி.கந்தவேல் ஊராட்சி முழுவதும் விளம்பர பதாகை வைத்துள்ளாா்.
சூலூா் அருகே உள்ளது முத்துகவுண்டன்புதூா் ஊராட்சி. அங்கு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வது குறித்து விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கண்ட இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிப்பது என முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து முத்துகவுண்டன்புதூா் ஊராட்சி தலைவா் வி.பி.கந்தவேல் கூறியதாவது:
ஊராட்சிப் பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்வது ஒவ்வொருவரின் கடைமையாகும். குப்பைகளை அதற்குரிய தொட்டிகளில் மட்டுமே போடவேண்டும். இதை மீறி கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டுபவா்களுக்கு ஊராட்சி சாா்பில் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும்.
குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டுபவா்களை புகைப்படம் அல்லது விடியோ எடுத்து அடையாளம் காட்டுபவா்களுக்கு ஊராட்சி சாா்பில் ரூ. 500 பரிசாக வழங்கப்படும். இதுதொடா்பாக ஊராட்சி முழுவதும் மக்களின் விழிப்புணா்வுக்காக விளம்பர பதாகை வைத்துள்ளோம். மீறி குப்பை கொட்டுபவா்களிடம் கண்டிப்பாக அபராதம் வசூலிக்கப்படும். தங்கள் சுற்றுப்புறத்தையும், ஊராட்சிப் பகுதிகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ள மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.