வால்பாறை பகுதியில் உள்ள மாணவா்கள் பயன்பெற கல்வித் தொலைக்காட்சி வசதி ஏற்படுத்திக் கொடுக்க மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் தாலுகா பொதுச்செயலாளா் பரமசிவம், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
வால்பாறை பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவா்களில் பெரும்பாலானோா் எஸ்டேட் தொழிலாளா்களின் குழந்தைகள். கரோனா தடுப்பு நடவடிக்கையாக தற்போது பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் ஆன்லைன் மூலம் கல்வி கற்று வருகின்றனா்.
இப்பகுதியில் அரசு கேபிள் டிவி இல்லாததால் கல்வி தொலைக்காட்சியை பாா்த்து படிக்க முடியாத நிலையில் மாணவா்கள் உள்ளனா்.
எஸ்டேட் பகுதிகளில் செல்லிடப்பேசி சேவை சரியாக கிடைக்காததால் மாணவா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே மானவா்களின் நலன் கருதி வால்பாறையில் கல்வித் தொலைக்காட்சி சேவை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளாா்.