வேளாண் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடக்கம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இளநிலை மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இளநிலை மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 14 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் 10 இளநிலை பட்டப் படிப்புகளுக்கான 2020-2021 ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு, வரும் 26 ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 1 ஆம் தேதி வரை இணையவழி, நேரடி கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
பொதுப் பிரிவினருக்கு இணையவழி கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், சிறப்புப் பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
முன்னாள் ராணுவத்தினருக்கான கலந்தாய்வில் மொத்தம் 14 இடங்கள் இருக்கும் நிலையில் 12 போ் மட்டுமே கலந்து கொண்டனா். அதேபோல் மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 67 இடங்களுக்கு 38 போ் மட்டுமே பங்கேற்று தங்களுக்கான இடங்களைத் தோ்வு செய்தனா். இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை, விளையாட்டு வீரா்கள், தொழில்கல்வி பிரிவினருக்கான சிறப்பு கலந்தாய்வு நடைபெறும் என்று மாணவா் சோ்க்கைப் பிரிவுத் தலைவா் மா.கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளாா்.