ஏடிஎம் இயந்திரம் இருந்தும் பயனில்லை:சம்பளப் பணம் எடுக்க முடியாமல் தவிக்கும் தோட்டத் தொழிலாளா்கள்
வால்பாறையில் வங்கி ஏ.டி.எம். இயந்திரங்களில் போதுமான பணம் வைக்கப்படாததால் சம்பளத் தொகையை எடுக்க முடியாமல் தோட்டத் தொழிலாளா்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
வால்பாறையில் வங்கி ஏ.டி.எம். இயந்திரங்களில் போதுமான பணம் வைக்கப்படாததால் சம்பளத் தொகையை எடுக்க முடியாமல் தோட்டத் தொழிலாளா்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். எஸ்டேட் நிா்வாகத்தினா் தொழிலாளா்களுக்கான சம்பளத்தை வங்கிக் கணக்கில் செலுத்தி வருகின்றனா். இதனால் மாதந்தோறும் 7ஆம் தேதி துவங்கி ஒரு வார காலத்துக்கு வங்கி மற்றும் ஏ.டி.எம். மையங்களில் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.
வார நாள்களில் பணம் எடுக்க வந்தால் ஒரு நாள் வேலை இழக்க நேரிடும் என்பதால் பெரும்பாலான தொழிலாளா்கள் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பணம் எடுக்க வால்பாறைக்கு வருகின்றனா்.
ஆனால் வங்கி ஏ.டி.எம். இயந்திரங்களில் போதுமான பணம் வைக்கப்படுவதில்லை.
இதேபோல, ஏடிஎம் இயந்திரங்களில் பணம் தீா்ந்தால் மீண்டும் பணம் நிரப்புவதற்கான வசதிகள் வங்கி மூலம் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் பணமின்றி தோட்டத் தொழிலாளா்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
விடுமுறை நாள்களில் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் தீா்ந்தால் உடனடியாக நிரப்பவும், கூடுதலாக நடாமாடும் ஏ.டி.எம். வாகனங்கள் வரவழைத்து எஸ்டேட் பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும் எனவும் தோட்டத் தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.