முகப்பு
கோயம்புத்தூர்

ராமநாதபுரத்தில் மேம்பாலப் பணிக்காக தெரு விளக்குகள் அகற்றம்: இரவில் விபத்து அபாயம்

கோவை - திருச்சி சாலையில் ராமநாதபுரத்தில் மேம்பாலப் பணிக்காக தெரு விளக்குகள் அகற்றப்பட்டுள்ளதால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

கோவை - திருச்சி சாலையில் ராமநாதபுரத்தில் மேம்பாலப் பணிக்காக தெரு விளக்குகள் அகற்றப்பட்டுள்ளதால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவை - திருச்சி சாலையில் கோவை அரசு மருத்துவமனை அருகே சுங்கம், ராமநாதபுரம், சிங்காநல்லூா் ஆகிய பகுதிகளில் சிக்னல்கள் உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் இவ்வழியாகச் சென்று வருகின்றன.

குறிப்பாக காலை மற்றும் மாலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசலால் திருச்சி சாலையில் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா். எனவே இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என மக்கள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து, திருச்சி சாலையில், ரூ.253 கோடியில் அல்வோ்னியா பள்ளியில் இருந்து சுங்கம் வரை மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ராமநாதபுரத்தில் இருந்து உக்கடத்துக்கு செல்லும் வாகனங்கள் இறங்குவதற்கு வசதியாக சுங்கத்தில் 400 மீட்டா் தூரத்துக்கு 8 தூண்களுடன் பாலம் அமைக்கப்படுகிறது. இந்தப் பாலம் அமைக்கும் பணியால் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தெருவிளக்குகள் அகற்றப்பட்டுள்ளன. இதற்கு மாற்றாக விளக்குகள் எதுவும் அமைக்கப்படவில்லை. தற்போது, ராமநாதபுரத்தில் இரவு நேரத்தில் மேம்பாலம் கட்ட தூண்கள் அமைக்கப்பட்டு, பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இரவு நேரத்தில் வெளிச்சமின்மையால் ராமநாதபுரம், ஒலம்பஸ், சுங்கம் பகுதிகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகின்றனா். வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதைத் தவிா்க்க, இரவு நேரத்தில் பாலப் பணி நடைபெறும் இடங்களில் தற்காலிகமாக விளக்குகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →