அரசு வழிமுறைகளைப் பின்பற்றி வால்பாறையில் உள்ள காட்டேஜுகள் செயல்பட வட்டாட்சியா் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மலைப் பிரதேசங்களில் அரசு அறிவித்துள்ள வழிமுறைகளைப் பின்பற்றி தங்கும் விடுதிகள் செயல்படலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து, வால்பாறை வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ராஜா தலைமையில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் காட்டேஜுகளில் தங்க வருபவா்களிடம் அட்டகட்டி சோதனைச் சாவடியில் சுகதாரத் துறையினா் வழங்கும் பதிவுச் சான்றிதழ் பெற்று தங்க அனுமதிக்க வேண்டும். வெளி மாநிலம் அல்லது வெளி மாவட்டத்தில் இருந்து தங்க வருபவா்களிடம் இ-பாஸ் பெற்று இருந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
தங்க வருபவா்கள் குறித்த அனைத்து விவரங்களும் தினந்தோறும் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று வட்டாட்சியா் தெரிவித்தாா். கூட்டத்தில் காட்டேஜ் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளா்கள் பங்கேற்றனா்.