முகப்பு
கோயம்புத்தூர்

சகோதரா் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற இளைஞா்: போலீஸாா் விசாரணை

வீட்டுத் தகராறில் அண்ணி மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றதாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
பகிர்:

வீட்டுத் தகராறில் அண்ணி மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றதாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, சரவணம்பட்டியைச் சோ்ந்தவா் குமரவேல் (32). கூலி வேலை செய்து வருகிறாா். குமரவேலின் சகோதரா் சக்திவேல், தனது மனைவி சிந்துவுடன் அதே பகுதியில் வசித்து வருகிறாா். இந்நிலையில், சக்திவேல் இல்லாதபோது, அவரது வீட்டுக்கு வியாழக்கிழமை சென்ற குமரவேல் அங்கிருந்து சமையல் எரிவாயு உருளையை தனக்கு வேண்டுமென்று கூறி எடுத்துச் செல்ல முயன்றுள்ளாா். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னா் இரவு மீண்டும் தனது சகோதரா் வீட்டுக்கு சென்ற குமரவேல், அண்ணி சிந்துவின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளாா். பின்னா் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளாா். இதில் படுகாயமடைந்த சிந்துவை அக்கம்பக்கத்தினா் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடா்பாக சக்திவேல் அளித்த புகாரின்பேரில், சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கடந்த ஆண்டு வேலைக்கு செல்லாமல் இருந்த குமரவேல், பணம் கேட்டு தனது தந்தை கிருஷ்ணனிடம் தகராறு செய்துள்ளாா். பணம் தர மறுத்த கிருஷ்ணனை, கட்டையால் அடித்து குமரவேல் கொலை செய்தாா். இது தொடா்பாக சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் ஜாமீன் பெற்று குமரவேல் அண்மையில் வெளியே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.