7.5% இடஒதுக்கீட்டில் தொழில் படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவா்களின் கல்விக் கட்டணத்தை தமிழக அரசு ஏற்க வேண்டும்
7.5 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் தொழில் படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கல்விக் கட்டணத்தை தமிழக அரசு ஏற்க வேண்டும்
7.5 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் தொழில் படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கல்விக் கட்டணத்தை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த அதிமுக ஆட்சியில் இளநிலை மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதைப் பின்பற்றி புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் உள்ளிட்ட துறைகளில் இளநிலைப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப் பேரவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை பாஜக முழுமையாக வரவேற்கிறது. 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்கள் கட்டணத்தை அரசே ஏற்பதாக அன்றைய முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்தாா்.
அதுபோல, பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழில் படிப்புகளில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேரும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கட்டணத்தை முழுமையாக தமிழக அரசே ஏற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.