காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!
காஞ்சிபுரம், பெரம்பலூர், தஞ்சாவூர், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதைப் பற்றி...
காஞ்சிபுரம், பெரம்பலூர், தஞ்சாவூர், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு உள்பட 5 மாநிலத் தேர்தலுக்கான தேதி அற்விக்கப்பட்டு, தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒரேகட்டமாக 234 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு ஏப். 23 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
பறக்கும் படையினர் சோதனைகளை நடத்தி விளம்பரங்கள் அழிப்பு, பரிசுப் பொருள்கள், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுச் செல்லப்படும் பணம் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழகத்தில் காஞ்சிபுரம், பெரம்பலூர், தஞ்சாவூர், தென்காசி ஆகிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனெவே, கடந்த மார்ச் 15 ஆம் தேதி கரூர், ஈரோடு, நாகை, விருதுநகர் ஆகிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 4 எஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் எஸ்பியாக ஜவகர், பெரம்பலூர் எஸ்பியாக பிரபாகர், தஞ்சாவூர் எஸ்பியாக சுந்தரவதனம் மற்றும் தென்காசி எஸ்பியாக மயில்வாகனன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் நாளை(மார்ச் 28) காலை 11 மணியளவில் அந்தந்த மாவட்டங்களில் பொறுப்பேற்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.