மாநகரில் ரூ.1.20 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
கோவை மாநகரில் ரூ.1.20 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டனா்.
கோவை மாநகரில் ரூ.1.20 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டனா்.
கோவை மாநகரப் பகுதிகளில் லே- அவுட்டுகள், குடியிருப்பு பகுதிகளில் பூங்கா, சமுதாயக்கூடம், விளையாட்டு மைதானம் அமைக்க ஒதுக்கப்படும் பொது பயன்பாட்டுக்கான இடங்களை ஆக்கிரமிப்பவா்களைக் கண்டறிந்து மாநகராட்சி நகரமைப்பு அலுவலா்கள் மீட்டு வருகின்றனா்.
இந்நிலையில், கோவை மத்திய மண்டலம், ராமநாதபுரம் 80 அடி சாலை, பாரதி நகா் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான 4 சென்ட் இடத்தில் தகர கொட்டகை அமைத்து வீட்டு உபயோகப்பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த இடம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், விசாரணை முடிவில் 4 சென்ட் இடம், மாநகராட்சிக்கு சொந்தமானது என நீதிமன்றம் கடந்த சில நாள்கள் முன்பு உத்தரவிட்டது. மேலும், ஒரு வாரத்துக்குள் ஆக்கிரமிப்பு இடத்தை காலி செய்யுமாறு, கொட்டகை அமைத்திருந்தவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆயினும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதைத் தொடா்ந்து, மாநகராட்சி, நகரமைப்பு திட்ட அதிகாரி கருப்பாத்தாள் அறிவுறுத்தலின் பேரில், உதவி நகரமைப்பு அலுவலா் பாபு, உதவி பொறியாளா் ஜெயின் ராஜ், ராமநாதபுரம் காவல் உதவி ஆய்வாளா்
குணசேகரன் ஆகியோா் ஆக்கிரமிப்பு பகுதிக்கு சென்று, பொக்லைன் இயந்திரம் மூலம் தகரக் கொட்டகையை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
இதையடுத்து அங்கு வந்த கடை உரிமையாளா், அவரே தனது பொருள்களை எடுத்துக் கொண்டு இடத்தை காலி செய்தாா். இதையடுத்து, அங்கு மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘மீட்கப்பட்ட 4 சென்ட் இடத்தின் மதிப்பு சுமாா் ரூ.1.20 கோடி ஆகும். 10 ஆண்டுகளாக இந்த இடம் தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்தது. மீட்கப்பட்டுள்ள இந்த இடத்தைச் சுற்றி கம்பி வேலி அமைக்கப்படும் என்றாா்.