வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்!
வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்து பேருந்து விபத்துக்குள்ளானது பற்றி...
வங்கதேசத்தின் பத்மா ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இதுவரை 23 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ராஜ்பாரி மாவட்டத்தில் இருந்து டாக்காவுக்கு வந்துகொண்டிருந்த பேருந்து, புதன்கிழமை மாலை 5 மணியளவில் தௌலத்தியாவில் உள்ள படகு முனையத்தில், பத்மா ஆற்றைக் கடக்க போக்குவரத்து படகில் பயணிகளுடன் பேருந்தை ஏற்ற முயற்சித்துள்ளனர்.
அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் 50 பேர் பயணித்த நிலையில், நீச்சல் தெரிந்த 11 பேர் கரை சேர்ந்துள்ளனர்.
இதுவரை 23 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன மற்றவர்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்புத் துறை, கடற்படை, காவல்துறை அடங்கிய மீட்புக் குழுவினர் இரவு முழுவதும் தேடுதல் பணிகளைத் தொடர்ந்து வருகின்றனர்.
ராஜ்பாரி மாவட்ட நிர்வாக அதிகாரிகளை தொலைப்பேசியில் அழைத்த வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மான், நிலைமையைக் கேட்டறிந்ததாகவும், விபத்து குறித்து விசாரிக்க உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.