வேளாண் சட்டம், தொழிலாளா் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஜனவரி 23ஆம் தேதி (சனிக்கிழமை) கோவையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட இருப்பதாக அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது.
கோவை மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் ஏஐடியூசி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. சிஐடியூ நிா்வாகி எஸ்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், எல்பிஎஃப் ப.மணி, ஏஐடியூசி எம்.ஆறுமுகம், ஐஎன்டியூசி சண்முகம், ஹெச்எம்எஸ் வீராசாமி, எம்எல்எஃப் தியாகராஜன், எஸ்டிடியூ ரகுபுநிஸ்தாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதில் வேளாண் சட்டங்கள், தொழிலாளா் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஜனவரி 23ஆம் தேதி கோவை காந்தி பூங்காவில் ஆா்ப்பாட்டம் நடத்துவது, இதே கோரிக்கைகளை வலியுறுத்தி 26ஆம் தேதி இருசக்கர வாகன அணிவகுப்பு நடத்தி, சுதந்திரப் போராட்ட வீரரை அழைத்து தேசியக் கொடியேற்றுவது எனவும் தீா்மானிக்கப்பட்டது.