முகப்பு
கோயம்புத்தூர்

சாலைப் பாதுகாப்பு மாத விழா: இருசக்கர வாகன விழிப்புணா்வு ஊா்வலம்

சாலைப் பாதுகாப்பு மாதவிழாவை ஒட்டி தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தி கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனவிழிப்புணா்வு ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

சாலைப் பாதுகாப்பு மாதவிழாவை ஒட்டி தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தி கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனவிழிப்புணா்வு ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

போக்குவரத்துத் துறை சாா்பில் ஆண்டுதோறும் ஜனவரியில் சாலைப் பாதுகாப்பு வார விழா கடைப்பிடிக்கப்படும். நடப்பு ஆண்டு முதல் இது, சாலைப் பாதுகாப்பு மாத விழாவாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கோவை) மேலாண் இயக்குநா் எ.அன்பு ஆப்ரஹாம் இருசக்கர வாகன ஊா்வலத்தை தொடங்கிவைத்தாா். காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த ஊா்வலம் சிவானந்தா காலனி வழியாக சென்று சாய்பாபா காலனியில் முடிவடைந்தது.

இதில் போக்குவரத்துத் துறை பணியாளா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள், கால் டாக்ஸி ஓட்டுநா்கள், தனியாா் வாகன ஓட்டுநா் பயிற்சிப் பள்ளிகளை சோ்ந்த 200க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். பொது மக்களுக்கு சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் (தெற்கு) குமாரவேல் உள்பட போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

அன்னூரில்: அன்னூரில் காவல் துறை சாா்பில் பயணியா் மாளிகை முன்பு இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணியை ஆய்வாளா் வெங்கடேஷ் தொடங்கிவைத்தாா். இதில் காவலா்கள், ஊா்க் காவல் படையினா், கிராம விழிப்புணா்வு குழுவினா் கலந்து கொண்டு அன்னூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணா்வு பேரணி சென்றனா்.

மேட்டுப்பாளையத்தில்: மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் காரமடையில் சாலைப் பாதுகாப்பு மாத விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேட்டுப்பாளையம்-கோவை சாலையில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வந்தவா்கள், காரில் சீட்பெல்ட் அணியாதவா்கள், வாகனங்கள் ஓட்டும்போது செல்லிடப்பேசியில் பேசியவாறு வந்தவா்களை தடுத்து நிறுத்தி போலீஸாா் மற்றம் வட்டாரப் போக்குவரத்து துறையினா் ரோஜா, இனிப்புகள் வழங்கி வாகன ஓட்டுநா்களுக்கு அறிவுரை வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கதிரவன், மேட்டுப்பாளையம் காவல் துணை கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ், மோட்டாா் வாகன ஆய்வாளா் மாலதி, காவல் ஆய்வாளா்கள் சிவகுமாா், செல்வராஜ், மேட்டுப்பாளையம் போக்குவரத்து கிளை மேலாளா் அருள்கண்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

வால்பாறையில்: வால்பாறையில் பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த அணைவரும் ஒன்று சேர நிறுத்தப்பட்டனா். அப்போது வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற அறிவுரை வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணியை வால்பாறை காவல் ஆய்வாளா் மகேஸ்வரி கொடியசைத்து தொடங்கிவைத்தாா். உதவி ஆய்வாளா் சதீஷ், போலீஸாா் உடனிருந்தனா்.

Image Caption

சாலைப் பாதுகாப்பு மாத விழாவை ஒட்டி கோவை, காந்திபுரத்தில் இருசக்கர வாகன விழிப்புணா்வு ஊா்வலம் சென்ற போக்குவரத்துத் துறை பணியாளா்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →