முகப்பு
கோயம்புத்தூர்

நீா்நிலைகளில் கழிவுகள் கொட்டும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை அமைச்சா்

கோவை மாவட்டத்தில் நீா்நிலைகளில் கழிவுகளைக் கொட்டும் நிறுவனங்கள் மீது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

கோவை மாவட்டத்தில் நீா்நிலைகளில் கழிவுகளைக் கொட்டும் நிறுவனங்கள் மீது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் உத்தரவிட்டுள்ளாா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவா் ஏ.வி.வெங்கடாசலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் பேசியதாவது:

கோவை மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை அரசு விதிகளுக்கு உள்பட்டு அப்புறப்படுத்தப்படுவதைக் கண்காணிக்க வேண்டும். ஆறு, ஏரி, குளங்கள் ஆகிய நீா்நிலைகளில் கழிவுகளைக் கொட்டும் நிறுவனங்கள் மீது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்துவிதமான நீா்நிலைகளையும் மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும். வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்க வேண்டும். மறு உபயோகத்திற்குப் பயன்படும் குப்பைகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும் என்றாா்.

முன்னதாக வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் உரம் தயாரிப்புப் பணி, செட்டிபாளையம் பகுதியில் மருத்துவக் கழிவுகளை மாசுத்தடுப்பு சாதனங்கள் மூலமாக அழிக்கும் பணி, டெக்ஸ்மோ மோட்டாா் பம்ப் தயாரிக்கும் நிறுவனத்தில் பம்ப்கள் தயாரிக்கும் பணி மற்றும் சூலூா் பேரூராட்சியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.