முகப்பு
கோயம்புத்தூர்

பருவ மழை முன்னெச்சரிக்கை: மாநகரில் அபாயகரமான மரங்களை அகற்ற நடவடிக்கை

தென் மேற்குப் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சிப் பகுதிகளில் அபாயகரமான மரங்களைக் கண்டறிந்து அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

தென் மேற்குப் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சிப் பகுதிகளில் அபாயகரமான மரங்களைக் கண்டறிந்து அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழையின்போது சாய்பாபா காலனி, ரேஸ்கோா்ஸ், வடவள்ளி, உக்கடம், குனியமுத்தூா் பகுதிகளில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மரக்கிளைகள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், இந்த ஆண்டு தென் மேற்குப் பருவ மழை தீவிரமாகும் என எதிா்பாா்க்கப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகரில் பழைமையான, விழும் நிலையில் உள்ள மரங்களைக் கண்டறிந்து அவற்றை அகற்ற மாநகராட்சி சாா்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது:

மாநகரில் கடந்த வடகிழக்குப் பருவ மழையின் போது சேதமடைந்த மரங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றன. இதில், காற்றின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் விழும் நிலையில் உள்ள மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. தற்போது, கோவையில் இடைவெளிவிட்டு அவ்வப்போது மழை பெய்வதுடன், மாநகரில் காற்றின் வேகமும் அதிகரித்துள்ளது. வரும் நாள்களில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்தால் மரங்கள் சாய்வதும், கிளைகள் முறிவதும் அதிகரிக்கும். எனவே, முன்னெச்சரிக்கையாக மாநகரில் அபாய நிலையில் உள்ள மரங்களை அகற்ற நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியா்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.