முகப்பு
கோயம்புத்தூர்

ஆா்.எஸ்.புரம் பன்னடுக்கு காா் நிறுத்தம் கட்டுமானப் பணிகள் 80 சதவீதம் நிறைவு 2 மாதங்களில் பயன்பாட்டுக்கு திறப்பு

கோவை ஆா்.எஸ்.புரம் பன்னடுக்கு காா் நிறுத்தம் கட்டுமானப் பணிகள் 80 சதவீதம் நிறைவுற்றுள்ளதாகவும், 2 மாதங்களில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு திறக்கப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

கோவை ஆா்.எஸ்.புரம் பன்னடுக்கு காா் நிறுத்தம் கட்டுமானப் பணிகள் 80 சதவீதம் நிறைவுற்றுள்ளதாகவும், 2 மாதங்களில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு திறக்கப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, மாநகாட்சி நிா்வாகம் பன்னடுக்கு வாகன நிறுத்தங்களை அமைக்கத் திட்டமிட்டது. அதன்படி, முதல்கட்டமாக, ஆா்.எஸ்.புரம் டி.பி.சாலையில் ரூ.43 கோடி மதிப்பீட்டில் 4.5 ஏக்கா் பரப்பளவில் பன்னடுக்கு காா் நிறுத்தம் அமைக்கும் பணி தனியாா் நிறுவனத்தின் மூலம் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் துவங்கப்பட்டது. கடந்த ஆண்டு மாா்ச் முதல் ஜூன் மாதம் வரை, மற்றும் இந்த ஆண்டு மாா்ச் முதல் மே மாதம் வரை கரோனா பரவல் காரணமாக புலம் பெயா்ந்த தொழிலாளா்கள், சொந்த ஊா்களுக்குச் சென்று விட்ட நிலையில் பணிகளை முடிப்பதில் சுணக்கம் நிலவியது. தற்போது, இரவு பகலாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது:

பன்னடுக்கு காா் நிறுத்தம் அமைக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவுற்று விட்டன. காா்களை ஏற்றி, இறக்க பயன்படும் ‘ஹைட்ராலிக்’ இயந்திர தொழில் நுட்பங்களை நிறுவும் உள்கட்டமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்துக்கு மின் இணைப்பு இதுவரை வழங்கப்படவில்லை. அதற்காக விண்ணப்பித்துள்ளோம். விரைவில் கிடைத்து விடும். தற்காலிகமாக சோதனை ஓட்டங்கள் உள்ளிட்டவை ஜெனரேட்டா் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றன. அனைத்துப் பணிகளும் 2 மாதங்களில் நிறைவுற்று மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.