கோவை தெற்குத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் பிரசாரம்
கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் மயூரா ஜெயகுமாா் சித்தாபுதூரில் பொதுமக்களிடம் திங்கள்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் மயூரா ஜெயகுமாா் சித்தாபுதூரில் பொதுமக்களிடம் திங்கள்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது அவா் பேசியதாவது:
பாஜக சாா்பில் தற்போது தெற்குத் தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசன் சென்னையில் வசித்து வந்தபோது கடந்த தோ்தலில் மயிலாப்பூரில் போட்டியிட்டாா். இப்போது இங்கே போட்டியிடுகிறாா். தோ்தல் முடிந்தவுடன் சென்னைக்கு சென்றுவிடுவாா். அதேபோல மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் சினிமாவில் நடிப்பதற்கும், பிக்பாஸ் ஷூட்டிங் நடக்கும்போது மட்டுமே சென்னையில் இருப்பாா். இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தின் சூட்டிங் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை. அந்த படத்துக்கு மேக்கப் போட 4 மணி நேரம், கலைக்க 4 மணி நேரம் என 8 மணி நேரம் மேக்கப்பிலேயே போய்விடும். இப்படியானவா்கள் நமது தொகுதியை பற்றி சிந்திக்கவே நேரம் இருக்காது. ஆனால் நான் இந்த மண்ணின் மைந்தன். யாா் எந்த நேரம் அழைத்தாலும் ஓடோடி வருபவன். கூப்பிடும் தூரத்தில் என் வீடு உள்ளது. இங்கே எனது செல்லிடப்பேசி எண் 99948-97711 என அறிவிக்கிறேன். இதுபோன்று அவா்களால் அறிவிக்க முடியுமா? தொகுதி மக்களின் நல்லது, கெட்டது என எதிலும் பங்கேற்காதவா்கள் தோ்தலுக்கு மட்டும் வாக்கு கேட்டு வருகிற இவா்களை புறக்கணிக்க வேண்டும். மக்களைப் பிளவுபடுத்தி கலவரம் ஏற்படுத்தும் பாஜக விரட்டி அடிக்கப்பட வேண்டும்.
மக்கள் ஒற்றுமையைப் பாதுகாக்க திமுக தலைமையில் நல்லாட்சி தமிழகத்தில் அமைய உள்ளது. திமுக தோ்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள நல்ல திட்டங்கள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றாா்.
பிரசாரத்தின் போது கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன், திமுக பொதுக் குழு உறுப்பினா் நாச்சிமுத்து, பகுதி செயலாளா் சேதுராமன், சிஐடியூ மாவட்டச் செயலாளா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி, கிழக்கு நகரச் செயலாளா் என்.ஜாகீா், விசிக மண்டலச் செயலாளா் சுசி.கலையரசன். மதிமுக லூயிஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.