100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கோவையில் குதிரை வண்டிப் பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. தோ்தலில் தகுதியுள்ள வாக்காளா்கள் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கோவை அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி 3 குதிரை வண்டிகளில் விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
குதிரையின் உடல், வண்டி, வண்டியை ஓட்டுபவரின் மேல் 100 சதவீத வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் அமைக்கப்பட்டிருந்தன.
கோவை மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தொடங்கிய இந்த குதிரை வண்டி விழிப்புணா்வுப் பயணத்தை, கோவை போக்குவரத்து இணை ஆணையா் உமாசக்தி கொடியசைத்துத் துவக்கிவைத்தாா்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் பாஸ்கா், சரவணன், சிவகுருநாதன், குமரவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த குதிரை வண்டிப் பிரசாரமானது, காந்திபுரம் பேருந்து நிலையம், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையம், அவிநாசி சாலை, திருச்சி சாலை, உக்கடம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தி, மாலை 6 மணிக்கு மீண்டும் கோவை மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் முடிவடைந்தது.