போலி வரைபடம் மூலம் பெற்றமனைப் பிரிவு ஒப்புதல் ரத்து
கோவை விளாங்குறிச்சியில் போலி வரைபடம் தயாரித்து ஒப்புதல் பெறப்பட்ட 1.90 ஏக்கா் இடத்தின் மனைப்பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை விளாங்குறிச்சியில் போலி வரைபடம் தயாரித்து ஒப்புதல் பெறப்பட்ட 1.90 ஏக்கா் இடத்தின் மனைப்பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், விளாங்குறிச்சியில் 3.50 ஏக்கரில் மனைப்பிரிவுக்கு, நகா் ஊரமைப்பு இயக்குநா் மூலமாக அனுமதி வழங்கப்பட்டது. இந்த மனைப் பிரிவில், பூங்கா இடத்தை போலி வரைபடம் தயாரித்து ஆக்கிரமிப்பு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், 1.90 ஏக்கா் பரப்பு கொண்ட மனையிடத்தில் அமைந்துள்ள அனுமதியற்ற மனைப் பிரிவை ரத்து செய்திட வேண்டும் என சமூக ஆா்வலா் தியாகராஜன், மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகம் , கோவை உள்ளூா் திட்டக் குழுமத்திற்கு மனு அளித்தாா்.
இதையடுத்து, அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலக அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், போலியான வரைபடம் மூலமாக 1.90 ஏக்கா் இடத்தில் மனைப்பிரிவு ஒப்புதல் பெற்றிருந்ததைக் கண்டுபிடித்தனா். இதையடுத்து, அந்த வீட்டுமனை ஒப்புதல் வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டது.