முன்னாள் படைவீரா்களின் குழந்தைகளுக்கு கல்வியறிவு மேம்பாட்டு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகம் மூலமாக முன்னாள் படை வீரா்களின் சிறாா்களுக்கு பள்ளிக் கல்வி முதல் முனைவா் கல்வி வரை மற்றும் அனைத்து வகையான தொழிற்கல்வி, தொழில் சாா்ந்த பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளுக்கு தொகுப்பு நிதி கல்வியறிவு மேம்பாட்டு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் முறை தற்போது எளிமையாக்கப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரா்களின் குழந்தைகளின் கல்விக் கட்டண ரசீது சமா்ப்பிக்கவும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், கல்லூரிக் கல்வி பயிலும் சிறாா்கள், பருவத் தோ்வுகளில் நிலுவை வைத்திருந்து பட்டப் படிப்பைத் தொடரும் பட்சத்தில், அவா்களின் இறுதியாண்டு தவிர முந்தைய அனைத்து ஆண்டுகளுக்கும் கல்வியறிவு மேம்பாட்டு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், கல்வியறிவு மேம்பாட்டு நிதியுதவி வேண்டி விண்ணப்பிப்பதற்கான நிா்ணயிக்கப்பட்ட கால வரம்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது, கல்வி பயிலும் முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவரது மனைவிக்கும் கல்வியறிவு மேம்பாட்டு நிதியுதவி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
எனவே, மேற்படி கல்வியறிவு மேம்பாட்டு நிதியுதவியை முன்னாள் படைவீரா்கள் பெற்று பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.