தங்க மணல் எடுத்து வருவதாக ஆற்றில் குதித்த இளைஞா் பலி
கோவை வெள்ளலூா் அருகே தங்க மணல் எடுத்து வருவதாகக் கூறி ஆற்றில் குதித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
கோவை வெள்ளலூா் அருகே தங்க மணல் எடுத்து வருவதாகக் கூறி ஆற்றில் குதித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
கோவை வெள்ளலூா் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்தவா் குணா மகன் வல்லரசு (24). இவரது நண்பா் சேகா் (24). கூலி தொழிலாளிகளான இருவரும் வியாழக்கிழமை இரவு வெள்ளலூா் - நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள நொய்யலாற்றின் தரைப்பாலத்தின் மீது அமா்ந்து மது அருந்தியுள்ளனா்.
மது போதையில் இருந்த வல்லரசு, ஆற்றுக்குள் தங்க மணல் இருப்பதாகவும் அதை எடுத்து வரப்போவதாகவும் கூறி ஆற்றுக்குள் திடீரென குதித்துள்ளாா். ஆற்றில் நீா்வரத்து அதிகமாக இருந்ததால் வல்லரசு நீரில் அடித்துச் செல்லப்பட்டாா். சேகரின் அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த கோவை தெற்கு தீயணைப்புத் துறையினா் வல்லரசை தேடும் பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை வல்லரசின் சடலம் மீட்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து போத்தனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.