போட்டியிடும் தொகுதியை முதல்வர் அறிவிப்பார் : தமிமுன் அன்சாரி
மனிதநேய ஜனநாயகக் கட்சி போட்டியிடும் தொகுதி குறித்து மு.க. ஸ்டாலின் நாளை (மார்ச் 27) அறிவிக்கவுள்ளார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய ஜனநாயகக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
போட்டியிடும் தொகுதி குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை (மார்ச் 27) அறிவிப்பார் என அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி இன்று (மார்ச் 26) தெரிவித்தார்.
திமுக கூட்டணி பங்கீட்டுக் குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு மனிதநேய ஜனநாயகக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று (மார்ச் 25) தமிமுன் அன்சாரி தெரிவித்திருந்தார்.
இதனிடையே எந்தத் தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து ஆலோசிக்க இன்று மீண்டும் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட நிர்வாகிகள் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வருகை புரிந்தனர்.
ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களுடன் தமிமுன் அன்சாரி பேசியதாவது:
''முதல்வர் எங்களை இன்முகத்தோடு வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். தொகுதி உடன்பாட்டை உறுதி செய்திருக்கிறார்.
எந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை முதல்வர் வெள்ளிக்கிழமை நாளை அறிவிப்பார். அவர் எந்த தொகுதி ஒதுக்கினாலும் சிறப்பாக பணியாற்றுவோம். விருப்ப தொகுதிகளின் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.
இரு தரப்பிலும் சரியான புரிதல் அடிப்படையில் விருப்பப்பட்ட ஒரு தொகுதி ஒதுக்கப்படும் எனக் கூறினார்கள். சாதி, மத பாகுபாடுகள் அற்ற மாவட்டமாக நாகை உள்ளது. இதனால், அனைத்துக் கட்சியினரும் அதனை நேசிக்கின்றனர்'' எனக் குறிப்பிட்டார்.