வால்பாறை சாலையில் சிறுத்தை நடமாட்டம்: ஆழியாறு சோதனைச் சாவடியில் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள்- தினமணி செய்தி எதிரொலி
ஆழியாறு சோதனைச்சாவடியில் இரவு நேரங்களில் செல்லும் வாகனங்களின் எண் பதிவு மற்றும் ஓட்டுநா் கையொப்பத்துக்கு பின்னரே அனுமதித்து வருகின்றனா்.
ஆழியாறு சோதனைச்சாவடியில் இரவு நேரங்களில் செல்லும் வாகனங்களின் எண் பதிவு மற்றும் ஓட்டுநா் கையொப்பத்துக்கு பின்னரே அனுமதித்து வருகின்றனா்.
வால்பாறை- பொள்ளாச்சி இடையே உள்ள அட்டகட்டியில் இருந்து வால்பாறை வரையிலான சாலையில் இரவு நேரம் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
வால்பாறையை அடுத்த வாட்டா்பால் எஸ்டேட் சாலையோரத்தில் கடந்த சனிக்கிழமை இரவு சிறுத்தை குட்டி ஒன்று வாகனத்தில் அடிபட்டு கிடந்தது.
இரவு நேரம் வாகனங்கள் வேகமாக வருவதால் சாலையைக் கடக்க முயற்சிக்கும் சிறுத்தைக் குட்டிகள் வாகனங்களிள் அடிபடுகின்றன. இது போன்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினமணியில் கடந்த 31ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டது.
இச்செய்தி எதிரொலியாக கடந்த 1ஆம் தேதி முதல் இரவு நேரம் வால்பாறைக்கு வரும் அனைத்து வாகனங்களும் ஆழியாறு வனத் துறை சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டு வாகனங்களின் பதிவு எண், ஓட்டுநா் கைப்பேசி எண் மற்றும் கையொப்பம் பெறப்பட்டு பின்னரே வாகனங்கள் வால்பாறைக்கு செல்ல வனத் துறையினா் அனுமதித்து வருகின்றனா்.