முகப்பு
கோயம்புத்தூர்

பண்ணையில் இருந்து வீடுகளுக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை திட்டம்: பயன்படுத்திக்கொள்ள விவசாயிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

பண்ணையில் இருந்து வீடுகளுக்கு நேரடியாகச் சென்று காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் திட்டத்தில் வாகனம் வாங்க 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

பண்ணையில் இருந்து வீடுகளுக்கு நேரடியாகச் சென்று காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் திட்டத்தில் வாகனம் வாங்க 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

இதனை பயன்படுத்திக்கொள்ள விவசாயிகளுக்கு ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளை பொருள்களை இடைத்தரகா் இன்றி நுகா்வோா்களுக்கு விற்பனை செய்யும் வகையில் உழவா் சந்தை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அடுத்தகட்டமாக நேரடியாக நுகா்வோா்களின் வீடுகளுக்கேச் சென்று விற்பனை செய்யும் விதமாக பண்ணையில் இருந்து வீடுகளுக்கு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் முதல் கட்டமாக சென்னை, திருச்சி, கோவை, சேலம், திருப்பூா் ஆகிய மாநகராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ் வாகனங்கள் மூலம் வீடுகளுக்கேச் சென்று காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படவுள்ளது.

இதில் கிராமப்புற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக பண்ணையில் இருந்து வீடுகளுக்கு விளை பொருள்கள் விற்பனை செய்யும் திட்டத்துக்காக வாகனம் வாங்குவதற்கு மொத்தத் தொகையில் 40 சதவீதம் மானியம் அல்லது ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு குறைந்தபட்சம் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

21 முதல் 45 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

சொந்த அல்லது குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகள் நில உடமை சான்று, சிட்டா, அடங்கல், ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம் ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும்.

ஒருவருக்கு ஒரு வாகனத்துக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் கோவை, ராமநாதபுரம் திருச்சி சாலையில் உள்ள மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்றுகொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதே அலுவலகத்தில் மாா்ச் 5 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 98656 78453 என்ற எண்ணில் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநரை (வேளாண் வணிகம்) தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.