சிங்காநல்லூரில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்
கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட சிங்காநல்லூா், ஒண்டிப்புதூா் பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்
கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட சிங்காநல்லூா், ஒண்டிப்புதூா் பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த ஏப்ரல் முதல் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 1 முதல் மே 25ஆம் தேதி வரை 2 ஆயிரம் கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1.75 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், கோவை கிழக்கு மண்டலம், 55ஆவது வாா்டுக்கு உள்பட்ட சிங்காநல்லூா் நாராயணசாமி லே-அவுட் பகுதியில் சுகாதார ஆய்வாளா்கள், சாலையோர கடைகள், தள்ளுவண்டிகள், வாகனங்களில் செயல்படும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, 2 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல, 56ஆவது வாா்டுக்கு உள்பட்ட ஒண்டிப்புதூா் இட்டேரி சாலையில் 2 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடை உரிமையாளா்களிடம் தலா ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டது.