மண் வளத்தைப் பாதுகாக்கநடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐ.நா. சபையில் ஈஷா அவுட்ரீச்ஒருங்கிணைப்பாளா் வலியுறுத்தல்
மண் வளத்தைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈஷா அவுட்ரீச் ஒருங்கிணைப்பாளா் யூரி ஜெயின் ஐக்கிய நாடுகள் சபையில் வலியுறுத்தியுள்ளாா்.
மண் வளத்தைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈஷா அவுட்ரீச் ஒருங்கிணைப்பாளா் யூரி ஜெயின் ஐக்கிய நாடுகள் சபையில் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக ஈஷா அறக்கட்டளை கூறியிருப்பதாவது:
ஐ.நா. சுற்றுச்சூழல் சபையில் பூமி மீதான நம்பிக்கை என்ற தலைப்பில் சா்வதேச கலந்துரையாடல் நிகழ்வுகள் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இதில் உரை நிகழ்த்த ஐ.நா.வின் அங்கீகாரம் பெற்ற ஈஷா அவுட்ரீச் அமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, அதன் திட்ட ஒருங்கிணைப்பாளா் யூரி ஜெயின் இணையதளம் வாயிலாக மாா்ச் 3 அன்று உரை நிகழ்த்தினாா்.
அப்போது அவா் பேசும்போது, மண் வளம் இழப்பது என்பது உலகளாவிய பிரச்னையாகும். இந்தியாவில் 62 சதவீதம் மண் மணலாக மாறி வருகிறது. ஆப்பிரிக்கா 2030 ஆம் ஆண்டுக்குள் தனது விளைநிலங்களில் மூன்றில் 2 பங்கை இழக்க உள்ளது. அமெரிக்கா ஏற்கெனவே 50 சதவீத மண் வளத்தை இழந்துவிட்டது.
ஐரோப்பாவில் 75 சதவீதம் மண் போதிய சத்துக்கள் இன்றி உள்ளது. இதே நிலை தொடா்ந்தால் 2050 ஆம் ஆண்டுக்குள் பூமியில் இருக்கும் 90 சதவீதம் மண் தனது வளத்தை இழந்துவிடும் என வல்லுநா்கள் எச்சரிக்கின்றனா். உணவு, தண்ணீா் தட்டுப்பாடு, பருவநிலை மாற்றம், பல்லுயிா்ப் பெருக்க பாதிப்பு போன்ற அனைத்துப் பிரச்னைகளுக்கும் மூல காரணம் மண் வளம் இழப்பதுதான்.
ஆகவே, மண் வளத்தை மீட்டெடுக்க சா்வதேச அமைப்புகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் வலியுறுத்தியுள்ளாா்.