புதுக்கோட்டையில் ஈகைப் பெருநாள் சிறப்புத் தொழுகை!
ரமலான் நிறைவு நாளையொட்டி, புதுக்கோட்டையில் ஈத் அல் பித்ர் எனப்படும் ஈகைப் பெருநாள் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
இஸ்லாமியர்களின் புனிதமாகக் கருதப்படும் ரமலான் நிறைவு நாளையொட்டி 'ஈத் அல் பித்ர்' எனப்படும் ஈகைப் பெருநாள் சிறப்புத் தொழுகை புதுக்கோட்டையில் சனிக்கிழமை (மார்ச் 21) காலை நடைபெற்றது.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகை உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு மாத தீவிர நோன்புக்குப் பிறகு, நோன்பை நிறைவு செய்து ஈகைப் பெருநாள் கொண்டாடப்படுகிறது.
புதுக்கோட்டை பேருந்து நிலையம் பின்புறமுள்ள ஈத்கா திடலில் சிறப்புத் தொழுகை சனிக்கிழமை காலை 7 மணிக்கு நடைபெற்றது. ஏராளமான இஸ்லாமியர்கள் இதில் கலந்து கொண்டனர்.
தொழுகை முடிந்து, ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி தங்களின் அன்பையும் வாழ்த்தையும் பகிர்ந்து கொண்டனர்.
இஸ்லாமியர்களின் வீடுகளிலும் சிறப்பு உணவுகளும், இனிப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டு, அனைவரும் புத்தாடை அணிந்து புனித ரமலானைக் கொண்டாடினர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், புதுக்கோட்டை நகர கிளைகள் 1, 2, ஆலங்குடி, கறம்பக்குடி, முக்கண்ணாமலைப்பட்டி, அன்னவாசல் , மேலத்தானியம், அறந்தாங்கி, வெட்டிவயல், ரெத்தினகோட்டை, ராஜேந்திரபுரம், கோட்டைபட்டினம், வடக்கு அம்மாபட்டினம் 1,2, ஜெகதாப்பட்டினம், கோபாலபட்டினம், ஆர். புதுப்பட்டினம், முத்துகுடா, கிருஷ்ணாஜிபட்டினம், கீரமங்கலம், மேற்பனைக்காடு, காசிம்புதுப்பேட்டை, பிஆர் பட்டினம், கட்டுமாவடி ஆகிய கிளைகள் சார்பாக 28 இடங்களில் ஈகைத் திருநாள் தொழுகை தவ்ஹீத் திடல்களில் நடைபெற்றது.
இந்த சிறப்புத்தொழுகையில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும் கலந்து கொண்டனர்.