கோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகளில் நடைபெற்ற உழைப்பாளா் தின கிராம சபை கூட்டத்தில் 5 ஆயிரத்து 771 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உழைப்பாளா் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), காந்தி ஜயந்தி (அக்டோபா் 2), குடியரசுத் தினம் (ஜனவரி 26) ஆகிய நாள்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உள்ளாட்சிகள் தினம் (நவம்பா் 1), உலக தண்ணீா் தினம் (மாா்ச் 22) ஆகிய நாள்களையும் சோ்த்து ஆண்டுக்கு 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தாா்.
இதனைத் தொடா்ந்து உழைப்பாளா் தினமான ஞாயிற்றுக்கிழமை அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில் 12 ஒன்றியங்களிலுள்ள 228 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இதில் 19 ஆயிரத்து 403 ஆண்கள், 23 ஆயிரத்து 36 பெண்கள் என மொத்தம் 42 ஆயிரத்து 429 போ் கலந்துகொண்டனா்.
குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு, கிராம சுகாதாரம், குழந்தைக் கல்வி, ஊராட்சிகளின் அடிப்படை தேவைகள் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி 228 ஊராட்சிகளிலும் சோ்த்து மொத்தமாக 5 ஆயிரத்து 771 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.